--> -->

ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் சந்திப்பு

ஜூன் 09, 2019

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இருநாட்டு தொடர்புகளை வலுவடையச் செய்வதற்கு அரச தலைவர்கள் இணக்கம்

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (09) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மிகுந்த உற்சாகமாக வரவேற்றார்.

மரியாதை வேட்டுக்கள் மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இந்திய பிரதமருக்கான இந்த வரவேற்பு இடம்பெற்றது.

நரேந்திர மோடி இரண்டாம் தடவையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுடனேயே தனது முதலாவது இராஜதந்திர சந்திப்பை மேற்கொண்டிருந்ததுடன், அதன்போது ஜனாதிபதி அவர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே அவர் இலங்கைக்கான இந்த விஜயத்தினை மேற்கொண்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு தாக்குதலின் பின்னர் இலங்கையில் அரச முறை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது அரச தலைவர் இந்திய பிரதமராவார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இரு தலைவர்களும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பயங்கரவாத தாக்குதலின் காரணமாக பதற்ற நிலை காணப்படும் இந்த சூழ்நிலையில் தனது நாட்டுக்கு வருகை தந்து உலகத்தினருக்கு வழங்கிய நற்செய்தி தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

அயல் நட்பு நாடான இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான நம்பிக்கை மற்றும் நட்புறவு இந்திய பிரதமரின் இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுவடைந்திருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்த விஜயமானது இலங்கையின் பொருளாதார, வர்த்தக, சுற்றுலா போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இக்கட்டான சூழ்நிலைகளில் அயல் நட்பு நாடுகளுக்கு உறுத்துணையாக இருப்பது தனது கடமையாகுமென்று இதன்போது இந்திய பிரதமர் நரேந்தர மோடி தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா இலங்கை மீது வைத்துள்ள நம்பிக்கையை எதிர்காலத்திலும் இவ்வாறே பாதுகாக்கப்படுமென அவர் தெரிவித்தார். அத்தோடு அனைத்து தரப்புகளின் உதவியுடன் சகல இனத்தோருக்கும் நீதியை நிலைநாட்டும் வகையில் கடமையாற்றிவரும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இந்திய பிரதமர் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார்.

இருநாட்டு உறவுகளை மேம்படுத்தல், வலயத்தின் பாதுகாப்பு, சமாதானம், நிலைபேறான தன்மை ஆகியன தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.

பயங்கரவாத தாக்குதல்களுக்கு இலக்காகிய இரு நாடுகள் என்ற வகையில், பயங்கரவாதத்தை கடுமையாக கண்டிக்க வேண்டுமென்றும் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டுமென்றும் இருநாட்டு தலைவர்களும் இணக்கப்பட்டனர்.

இருநாடுகளுக்கிடையில் நீண்டகால ஆழமான நட்பிற்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை, ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட கொள்கையே காரணமாக அமைந்திருப்பதாகவும் இருநாடுகளுக்குமிடையிலான உறவினை மேலும் வலுபடுத்திக்கொள்ள வேண்டுமென்றும் இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கினர்.

தனக்கு வழங்கிய உற்சாகமான வரவேற்பிற்கும் உபசரிப்பிற்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கை மக்களுக்கும் இந்திய பிரதமர் தனது நன்றிகளை தெரிவித்தார்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை அடையாளப்படுத்தும் முகமாக ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் இருநாட்டுத் தலைவர்களும் மரக்கன்றொன்றினை நாட்டினர்.

இந்திய பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தை நினைவுகூரும் முகமாக இன்றைய தினம் இருநாட்டு தலைவர்களும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் அண்மையில் இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றும் ஜனாதிபதி அவர்களால் இந்திய பிரதமருக்கு வழங்கிவைக்கப்பட்டது.

நன்றி: pmdnews.lk