--> -->

வெலிசர கடற்படை தளத்தில் கொரோனா வைரஸின் பரவல் குறித்த ஊடகங்களின் ஊகங்களை கடற்படை மறுப்பு

மே 21, 2020

வெலிசர கடற்படைத் தளத்தில் வைரஸ் பரவல்நிலை தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதாக சந்தேகம் தெரிவித்து வெளியிட்டுள்ள சில ஊடகங்களின் அறிக்கைகளை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா முற்றிலும் மறுத்துள்ளார். கடற்படை வீரர்களிடையே வைரஸ் தொற்று பரவலடைவதை தடுக்கும் தடுக்கும் அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்கள் மற்றும் போதை பொருளுக்கு அடிமையாகியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட கடற்படைத் தளத்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி ஆதாரமற்றதும் உண்மைக்குப் புறம்பானதுமாகும் என அவர், பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு தெரிவித்தார்.

அபாய மதிப்பீட்டு முடிவுகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு திட்டங்களில் கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பாக 'ஜா-எல, சுதுவெல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின்போது கடற்படை வீரர்களுக்கு வைரஸ் பாதிப்பு மற்றும் சுகாதார அபாயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளன 578 கடற்படை வீரர்களில் இதுவரை மொத்தமாக 237 கடற்படை வீரர்கள் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர்.

சுகாதார நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கடற்படை வீரர்களை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வெலிசர கடற்படை வீரர்களிடையே வைரஸ் தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் தொற்றுநோயியல் நிபுணர்களின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை கடற்படைத் தளத்தை சூழவுள்ள பகுதிகளில் கடற்படை வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுதுவெல்லவிலிருந்து கொழும்பில் உள்ள நகலன் வீதி வரை ஈடுபடுத்தப்பட்ட கடற்படை வீரர்களினால் நாட்டில் ஏற்பட இருந்த பாரிய ஒரு சுகாதார பேரழிவு தடுக்கப்பட்டதாக கடற்படைத் தளபதி தெரிவித்தார்.

கடற்படைத் தளத்தில் கடற்படை வீரர்களிடையே வைரஸ் தொற்று மேலும் பரவலடைவதை தடுக்கும் வகையில் அவர்கள் வெவ்வேறு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுதுவெல்ல சம்பவத்தின் போதே கடற்படை வீரர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர்களுக்கு வேறு எங்காவது இருந்து தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அரிதாகவே உள்ளது எனவும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இலங்கை இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கடற்படை தளத்தை பார்வையிட்ட தொற்றுநோயியல் பிரிவு அதிகாரிகள், வெலிசர கடற்படைத் தளத்தில் வைரஸ் பரவல்நிலை எவ்வாறு உயிர்ப்புடன் உள்ளது குறித்து சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அவர்களிடையே கொரோனா வைரஸ் எவ்வாறு பரவலடைகிறது என்பது குறித்த அவர்களின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம், ”எனவும் அவர் தெரிவித்தார்.