இலங்கையின் இறைமை, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் 73 வது சுதந்திர தின விழா
பெப்ரவரி 04, 2021ஸாதிக் ஷிஹான்...•
இன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அற்றுப் போயிருந்த சுதந்திரத்தை எமது நாட்டின் பாதுகாப்பு படையினர் தங்களது முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளுடன் இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் பெற்றுக் கொடுத்துள்ளனர். யுத்தத்திற்கு பின்னரான தற்போதைய காலகட்டத்தில் அதேபடையினரின் பங்களிப்புகளுடன் சகல இன மக்களும் சுதந்திரமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழக் கூடிய சிறந்த ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று தசாப்த யுத்தத்துக்கு பின்னர் மக்கள் உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசித்து வருகின்றனர். நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட்டு தேசிய பாதுகாப்பு, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், வெளிநாடுகளுடனான இராஜதந்திர, பாதுகாப்பு உறவுகள் நாளுக்கு நாள் மேம்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கை தனது 73ஆவது தேசிய சுதந்திர தினத்தை இன்று (2021.02.04) கொண்டாடுகின்றது.
இம்முறை சுதந்திர தின பிரதான அணிவகுப்பில் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் இராணுவத்தைச் சேர்ந்த 3153 பேரும், கடற்படையைச் சேர்ந்த 821 பேரும், விமானப் படையைச் சேர்ந்த 740 பேரும் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையைச் சேர்ந்த 510 பேரும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 457 பேரும் அடங்குவர்.
இது தவிர கலை, கலாசார மற்றும் பாரம்பரிய நிகழ்வில் 340 இளைஞர், யுவதிகள் கலந்து தமது நாட்டின் கலை, கலாசார பாரம்பரியத்தை தமது திறமையான நடனங்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் காண்பிக்கவுள்ளனர்.
இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை, தேசிய இளைஞர் படை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான படைவீரர்களின் அணிவகுப்பும், விமானப் படையின் வான் சாகசங்களும் இன்றைய நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில் அமையவுள்ளன.
வழமை போன்று பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்ரமரட்ண, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர ஆகியோரின் வருகை இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக்க, அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரண்ணாகொட, நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் வருகையும் இடம்பெறவுள்ளது.
அதன் பின்னர் பொலிஸாரின் விஷேட வாகன பவனிக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் அழைத்து வரப்பட்டவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறையில் பொலிஸ் வாகன பவனி மற்றும் பொலிஸ் குதிரைப் படையின் அணிவகுப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் திருமதி அயோமா ராஜபக்ஷ ஆகியோரின் வருகை இடம்பெறுகிறது.
ஜனாதிபதியின் வருகையைத் தொடர்ந்து பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியை பிரதான கொடிக்கம்பத்திற்கு அழைத்து சென்றவுடன் மங்கள முழக்கம், வாத்தியத்திற்கு மத்தியில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின பிரதான வைபவத்தை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கிறார். இதன் போது சுமார் 11 பாடசாலைகளைச் சேர்ந்த 45 மாணவிகளினால் தேசிய கீதம் பாடப்படும். ஜனாதிபதி விஷேட மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் ஜயமங்கள காத்தா மற்றும் தேவ வஸ்து பாடப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து இலங்கையின் சுதந்திரம் இறைமை, தேசிய ஒருமைப்பாடு என்பவற்றை நிலைநாட்டும் பொருட்டு தாய்நாட்டிற்காக உயிர் நீத்த சகல தேசாபிமானிகளையும் நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து முப்படைகளினால் ஜனாதிபதிக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்படுவதுடன், மரியாதை நிமித்தம் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும்.
அதன் பின்னர் பிரதான மேடையிலிருந்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தனது சுதந்திர தின உரையை நிகழ்த்துவார். அதன் பின்னர் முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் மாணவர் படையணியினரின் மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. இம்முறை இலங்கை இராணுவத்தின் பிரதான பதவிநிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னோண்டோவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மரியாதை அணிவகுப்பில் சுமார் ஐயாயிரம் படைவீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
பாதுகாப்புப் படையினரின் மரியாதை அணிவகுப்பு:
இம்முறை சுதந்திர தின பிரதான அணிவகுப்பில் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஐயாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மட்டுப்படுத்தப்பட்ட வகையிலேயே முப்படையினர் இம்முறை பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று அனைத்து பாதுகாப்பு படையினரும் முககவசங்கள் அணிந்த நிலையில் இந்த மரியாதை அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர்.
இராணுவம்:
இராணுவ அணிவகுப்பில் இராணுவத்தின் ஆயுதங்கள், கனரக கவச வாகனங்கள், யுத்த தளபாடங்கள், உபகரணங்கள். ஆட்டிலரி, பீரங்கி தாங்கிய வாகனங்கள், மோப்ப நாய்கள் பொறியியல் உபகரணங்கள் உட்பட யுத்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இராணுவம் பயன்படுத்தும் பல்வேறு வாகனங்களும் அணிவகுத்து செல்லவுள்ளன.
கடற்படை:
அதேபோன்று கடற்படையினர் அணிவகுப்பும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது. கடற்படையின் கொமொடோர் இசுரு காசிவத்த தலைமையில் நடைபெறவுள்ள இந்த அணிவகுப்பில் கடற்படையின் எட்டு வகையான பிரிவினர் அணிவகுப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்களில் கடற்படையின் விஷேட படகு பிரிவினர், மீட்பு பிரிவினர், மெரைன் படைப் பிரிவினர், பெண்கள் படைப்பிரிவினர் இதில் அடங்குவர். இம்முறை சுதந்திர சதுக்கத்தில் விழா நடைபெறுவதால் பிரதான நிகழ்வில் கடல் வழி சாகசங்களை காண்பிக்க முடியாமையினால் பிற்பகல் 4.00 மணிக்கு காலிமுகத்திடல் கடற்பரப்பில் சில சாகசங்களை காண்பிக்கவுள்ளனர். 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இவை இடம்பெறவுள்ளன.
அத்துடன் தேசத்திற்காக அர்ப்பணித்தவர்களை நினைவு கூர்ந்து இம்முறை வழமைக்கு மாறாக காலிமுகத்திடல் கடலில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான சமுதுர கப்பலில் இருந்து பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படவுள்ளமை விஷேட அம்சமாகும்.
விமானப்படை:
அதேபோன்று சீனக்குடா விமானப் படைத் தளத்தின் தளபதி எயார் கொமொடோர் பந்துல எதிரிசிங்க தலைமையில் விமானப்படை நிகழ்வு நடைபெறவுள்ளது. விமானப் படையினரும் தரையில் தமது படை உபகரணங்களுடன் அணிவகுத்து செல்லவுள்ள அதேசமயம், கொழும்பு சுதந்திர சதுக்க மற்றும் அதனை அண்டிய வான் பரப்பில் விமானப் படையின் பல்வேறு ரக விமானங்கள், ஹெலிகொப்டர்கள், தாக்குதல் விமானங்கள் உள்ளடங்களாக 26 வகை விமானங்கள் தேசிய கொடியை பறக்க விட்ட நிலையில் வானில் சாகசங்களை காண்பித்த வண்ணம் அணிவகுத்து பறந்துச் செல்லவுள்ளன. எப்7 ரக தாக்குதல் விமானங்களும், எம்.ஏ 60, வை12, பிரி6 ரக விமானங்களும், பெல் 412, பெல் 212, எம்ஐ 17 ரக ஹெலிகொப்டர்களுமே கொழும்பு வான் பரப்பில் தமது சாகங்களை காண்பிக்கவுள்ளன.
பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப் படை:
பொலிஸாரின் அணிவகுப்பிற்கு மேலதிகமாக பொலிஸாரின் மிகவும் பழைமை வாய்ந்ததும் பாரம்பரியதுமான பாண்ட் வாத்தியங்களுடன் அவர்கள் அணிவகுத்து செல்லவுள்ளனர். அத்துடன் இம்முறையும் மரியாதை அணிவகுப்பில் பொலிஸ் குதிரைப் படையினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
பொலிஸாரை தொடர்ந்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் அணிவகுத்து செல்லவுள்ளனர்.
இதேவேளை, சுதந்திரத்தினத்தில் முப்படையினர் அணிவகுத்து செல்வதும் தரை, கடல் மற்றும் வான் பரப்பில் சாகசங்களை காண்பிப்பதும் வெறுமனே சாகசங்களை காண்பிப்பதல்ல நோக்கம் மாறாக எமது நாட்டிற்கே உரித்தான முப்படைகளின் பலத்தையும் தரத்தையும் வெளிக்காண்பிப்பது ஆகும்.
கலாசார நிகழ்வு:
முப்படையினர் பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படை, தேசிய இளைஞர் பேரவை, மாகாண சபைகள் மற்றும் கலாசார நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இசை மற்றும் நடன கலைஞர்கள் 340 பேர் பங்குபற்றவுள்ளனர்.
சமய வழிபாடுகள்:
இதேவேளை சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பௌத்த, இந்து, கிறிஸ்தவ, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மத தலங்களில் சமய வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன.
இம்முறை சர்வமத ஆசிர்வாதங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன் இன்று 04ஆம் திகதி பௌத்த மத அனுஷ்டானம் நாரஹேன்பிட்டிய அபயராமயிலும், இந்து மத அனுஷ்டானம் கொழும்பு – 04 பம்பலபிட்டி புதிய கதிரேசன் கோயிலும், இஸ்லாமிய சமய நிகழ்வு கொழும்பு – 04 நிமல் வீதியிலுள்ள மஸ்ஜிதுல் கைராத் ஜூம்ஆ பள்ளிவாசலிலும், கத்தோலிக்க தேவ ஆராதனை சியலு சான்த்துவரயன்கே தேவாலயத்திலும், கிறிஸ்தவ தேவ ஆராதனை கொழும்பு – 6 சோனக தெருவிலுள்ள மெதடிஸ் தேவாலயத்திலும் நடைபெறவுள்ளன.
மாகாண மற்றும் மாவட்ட மட்ட கொண்டாட்டங்கள்:
கொழும்பில் தேசிய சுதந்திரதின பிரதான நிகழ்வு நடைபெறவுள்ள அதேசமயம் வடக்கு, கிழக்கு உள்ளடங்களாக நாட்டிலுள்ள ஒன்பது மாகாண மற்றும் 25 மாவட்டங்களிலும் மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய தின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
மர நடுகை வேலைத் திட்டம்:
அத்துடன் இம்முறை தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய நாடளாவிய ரீதியில் மர நடுகை வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் மாவட்ட, பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவகர்களின் பங்களிப்புடன் இந்த மர நடுகை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி : www.thinakaran.lk