--> -->

பொலிஸ் திணைக்களம் கல்விமான்கள் நிறைந்த தொழில்சார் நிபுணத்துவமடைந்த சேவையாக வேண்டும்

ஜனவரி 23, 2019

பொலிஸ் திணைக்களமானது கல்விமான்களைக் கொண்ட தொழில்சார் நிபுணத்துவம் அடைந்த சேவை நிலையமாக வேண்டும் எனவும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தை பட்டம் வழங்கும் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதுடன், அதற்கான தடைகளை நீக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (21) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், பொலிஸ் திணைக்களத்தினை பலப்படுத்துவதற்கும் அதன் சேவைகளை உயர் தரத்தில் வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய பல செயற்பாடுகள் கடந்த காலத்தில் தவறவிடப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். தான் பொலிஸ் திணைக்களத்திணை பொறுப்பேற்று இரண்டு மாதங்களேயான குறுகிய காலத்திற்குள் அதனை பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பொலிஸ் திணைக்களத்தினை பலப்படுத்துவதற்கான சட்ட திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, தனது ஆலோசனைகளுக்கமைய புதிய சட்டதிட்டங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் சட்டமா அதிபரினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்தார்.

குற்றங்களை தடுத்தல் மற்றும் பாரதூரமான குற்றங்களை புரிந்த குற்றவாளிகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மனித உரிமைகள் என்ற பெயரில் சிலர் அதற்கு எதிராக குரல் எழுப்புகின்றனர் என ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

பாதாள உலகத்தினரை இல்லாதொழித்தல், குற்றங்களை தடுத்தல், போதைப்பொருள் கடத்தல்களை ஒழித்தல், பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட சமூகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக அவர்கள் தமது குரலை எழுப்புவதில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகளில் சாதகமற்ற நிலையை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களை மேற்கொள்ள தாம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லையெனவும் வலியுறுத்தினார்.

உயிர்த் தியாகங்களை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான தமது பொறுப்புக்களை நிறைவேற்றும் பொலிஸாருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய உயர் கௌரவத்தை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்கள உறுப்பினர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கை ரீதியான தீர்மானங்களை, பொலிஸ் திணைக்களம், பொலிஸ் ஆணைக்குழு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு ஆகியவை இணைந்து கலந்தாலோசித்து துரிதமாக செயற்படுத்த வேண்டுமெனவும் அவற்றை ஒருபோதும் தாமதப்படுத்தக் கூடாதெனவும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது தெரிவித்தார்.

“உறுதிப்பாட்டின் ஊடாக தொழில் நிபுணத்துவம்” எனும் தொனிப்பொருளில் இயங்கிவரும் தேசிய பொலிஸ் கற்கை நிலையத்தின் முதலாவது டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றதோடு, பாடநெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 264 உறுப்பினர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ்களும் உயர் டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதனை அடையாளப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அவர்கள் சில பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பலர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk