--> -->

ஜனாதிபதி இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளை சந்தித்தார்

நவம்பர் 30, 2019

இன்று (30) பிற்பகல் இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது இந்திய பயணத்தை நினைவுகூரும் முகமாக உயர் ஸ்தானிகர் அலுவலக வளாகத்தில் மாமரக் கன்று ஒன்றை நாட்டினார்.

இங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், இரண்டு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் தூதரக பணியின் பொறுப்புக்களை நிறைவேற்றுவதன்  முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ மற்றும் பணிக்குழாம் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மகாபோதி சங்கத்தின் தலைவர் மற்றும் தம்பதிவ சாஞ்சி சேத்தியகிரி விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய பானகல உபதிஸ்ஸ தேரரும் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

சாஞ்சி விகாரையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை யாத்திரிகர்களுக்கு விகாரையின் வரலாற்று தகவல்களை சிங்கள மொழியில் காட்சிப்படுத்துவது குறித்து தேரர் அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினார்.

இந்திய இளம் பிக்குகளுக்காக பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தேரர் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

இதே நேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் (Ramk Madhav) அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்றும் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்து மகழ்ச்சி தெரிவித்த திரு ராம் மாதவ் ஜனாதிபதி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதே நேரம் இந்து செய்தி பத்திரிகையின் ஆசிரியர் திருமதி. சுஹாசினி ஹைதரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

நன்றி: pmdnews.lk