--> -->

பாதுகாப்பு ஊடகப் பிரிவுகளை அரசாங்கம் சீரமைப்பு

டிசம்பர் 05, 2019

* பொலிஸ் ஊடகப் பிரிவு அகற்றப்படமாட்டாது

* விஷேட பிரமுகர்களை   படுகொலை செய்யும்  சதித் திட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணை  தொடங்கப்பட்டுள்ளது

*விழாக் காலங்களில் அதி உச்ச பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

இராணுவம் தொடர்பான செய்திகளை மேலும் திறம்பட பரவலாக்கம் செய்யும் வகையில்  பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ஊடக பிரிவுகளை அரசாங்கம் சீரமைக்கவுள்ளது.

எனினும் பொலிஸ் ஊடகப் பிரிவை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் நாம் முப்படை மற்றும்  பொலிஸாருக்கும் பொதுவான ஊடகப் பிரிவினை அமைக்கவுள்ளோம் என  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின்  கேள்விகளுக்கு பதிலளித்த  அவர் விஷேட பிரமுகர்களை   படுகொலை செய்யும்  சதித் திட்டம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சீனாவினால் நன்கொடையாக அளிக்கப்பட 75மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 187 மோட்டார் சைக்கிள்களை   நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன ஆகியோர்  கலந்து கொண்டு கொண்டு மோட்டார் சைக்கிள்களை  பகிர்ந்தளித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் விழாக் காலங்களில் நாடு முழுவதும் அதி உச்ச  பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பை பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பொலிஸாரும், முப்படையினரும்  அதிக உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பை எவரும் ஆபத்தில் வைத்திருக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.