--> -->

பாதுகாப்பு உபகரண கொள்வனவிற்காக இந்தியா 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

ஜனவரி 18, 2020

பாதுகாப்பு உபகரணங்களை   கொள்வனவு செவதற்காக  இந்தியாவினால்  இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்  கடனுதவி வழங்குவதற்கு   இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித் டோவல் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (ஜனவரி,18) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

மேலும் அவர், ஏனைய  பிராந்திய நாடுகளை பார்வையாளர்களாக உள்ளடக்கிய கடல்சார் கள விழிப்புணர்வை மதிப்பாய்வு செய்வதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

தொடர்ந்து இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இரு நாட்டு  இராணுவத்திற்கிடையிலான ஒத்துழைப்பினை உருவாக்குதல், கடல்சார் பாதுகாப்பு மற்றும் இரு நாட்டு  கடலோர பாதுகாப்பு படைகளும் ஒன்றித்து  இயங்கக்கூடிய தன்மை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,  கடத்தல், போதைப்பொருள் கடத்தல்  ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இரு நாடுகளினதும்   கடலோர பாதுகாப்பு படைகளின் பரஸ்பர செயல்பாடு மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.