--> -->

அரசாங்கம், ஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக முழு அரச இயந்திரத்தையும் டிஜிட்டல் மயமாக்கவுள்ளது

ஜனவரி 24, 2020

அரசாங்கம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) மேற்பார்வை மற்றும் நிர்வாகத்தின் கீழ் தகவல் தொலைதொடர்பு தொழில்நுட்பம் (ICT) மூலம் ஒருங்கிணைந்த அமைப்பின் ஊடாக முழு அரச பொறிமுறையையும் டிஜிட்டல் மயமாக்கவுள்ளது.  

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாரஹன்பிட்டவில் அமைத்துள்ள தொடர்பாடல்  தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (ICTA) கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இங்கு அவர்,  இந்நிறுவன அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார். இதன்போது அவர், அரச நிறுவனங்கள் மிகவும் திறம்பட செயல்பட டிஜிட்டல்மயமாக்கல் கொள்கையை செயல்படுத்தும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தூரநோக்கு குறித்து விளக்கமளித்தார்.   

"தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தை (ICTA) பாதுகாப்பு அமைச்சின் கீழ் பட்டியலிட்டதன் நோக்கம், மேற்குறிப்பிட்ட செயல்முறையைத் தொடரவும் எளிதாக்கவும் ஆகும். தேசிய பாதுகாப்பு இல்லாத நிலையில், தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தால் எவ்வித பயனும் இல்லை. பாதுகாப்பு அமைச்சின் கீழ் இந்நிறுவனம் அமைந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஏனெனில் பாதுகாப்பு அமைச்சு அதிக செயற்பாடுகள், அதிக சக்தி மற்றும் அதிக வளங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.” என மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.   

தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் முன்னர் தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்ட ஒரு அரச நிறுவனமாகும், இது இப்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளீர்க்கப்பட்டுள்ளது. 

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பத்திற்கான அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயல் திட்டத்தைத் தொடங்கவும் செயல்படுத்தவும் தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு ஆகியன பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படுகின்றன.  

இந்த நிகழ்வில் தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவன தலைவர் ஜெயந்த டி சில்வா, பணிப்பாளர் குழு பேராசிரியர் லலித் கமகே, கலாநிதி சஞ்சீவ வீரரத்ன, ரேஷன் தேவபுரா, வசந்த தேசபிரிய, மனோரி உனம்புவ, தலைமை நிர்வாக அதிகாரி மஹிந்த பி.ஹேரத், தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஹிரண்ய சமரசேகர மற்றும் இந்நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.