--> -->

இலங்கையின் அரச துறையை நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு இஸ்ரேலிய அரசாங்கம் உதவி

பெப்ரவரி 13, 2020

•    இலங்கையின் அரச துறை நவீனமயப்படுத்தல் மற்றும் இணைய பாதுகாப்பு அபிவிருத்திக்கு இஸ்ரேலிய அரசாங்கம் உதவ தயார்.   

•    சிறந்த நீர்ப்பாசன தொழிநுட்பம் மற்றும் நவீன விவசாய முறைகளை வழங்குவதாக உறுதியளிப்பு     

நாட்டின் அரச துறையினை நவீனமயப்படுத்துவதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் உதவ தயாராக உள்ள அதேவேளை, இராணுவ உறவுகளை வலுப்படுத்தல், புலனாய்வு பகிர்வினை மேற்கொள்ளல், இலங்கை பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு மேலதிக பயிற்சி வசதிகளை வழங்குவதற்கும் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.   

இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் ரொன் மல்கவுக்கும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவுக்குமிடையில் பாதுகாப்பு அமைச்சில் இன்று (பெப்ரவரி, 12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.   

இலங்கைக்கு அதன் விவசாயம், கல்வி, போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்கும் அதேவேளை, எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்கும்  வகையில்  நாட்டில் வளர்ந்து வரும் இணைய பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கு இஸ்ரேலிய அரசு அதன் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இஸ்ரேலிய அரசாங்கம் ஆர்வத்துடன் இருப்பதாகவும் எனவே பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாகவும் இஸ்ரேலிய தூதுவர் மேலும் தெரிவித்தார்.    

"இஸ்ரேலின் உயர்தொழில்நுட்பத் துறையானது ஏனைய நாடுகளை விட ஒரு படி மேலோங்கி காணப்படுவதுடன், அது எப்போதும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது, எனவே விவசாயம், மீன்பிடி, கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ஏனைய  துறைகளிலும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய பல வழிகள் உள்ளன," என்றும் அவர் தெரிவித்தார். 

இந்தியாவில் விவசாயத்துறை வளர்ச்சிக்கு தனது நாடு வழங்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய அவர், இத்துறையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயணடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.  முறையான நீர்ப்பாசன முகாமைத்துவம் விவசாயத்தின் ஒரு முக்கிய பகுதியாக திகழ்கிறது. நீர் முகாமைத்துவத்திற்கு ஒரு சிறந்த அணுகுமுறை இருப்பதுடன், இங்கு சொட்டு நீர் நீர்ப்பாசன முறையினை மேம்படுத்த இஸ்ரேலிய அரசு உதவி வழங்க தயாராக உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.     

நாட்டின் தற்போதைய அரச நிர்வாகத் துறையை நவீனமயப்படுத்துவதின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்திய மேஜர் ஜெனரல் குணரத்ன இந்த விடயம் தொடர்பில் இஸ்ரேலிய அரசு உதவ முன்வந்தமையை வரவேற்றார்.   

விசேடமாக திட்டமிடப்பட்ட போதைப்பொருள் கடத்தல்  நடவடிக்கைகளை முறியடிப்பதில் இஸ்ரேல் உலகின் சிறந்த உளவுத்துறை சேவையை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த பாதுகாப்பு செயலாளர், இரு நாடுகளுக்கிடையே புலனாய்வு பகிர்வினை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.   

பரஸ்பர நலன்கருதி இருநாடுகளினதும் பொலிஸ் மற்றும் முப்படைகளுக்கிடையிலான  அறிவு, நிபுணத்துவம் மற்றும் பயிற்ச்சிகளை பரிமாறிக்கொள்ள முடியும் என்றும் மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.  

இருநாடுகளும் பொதுவான சவால்கலையே எதிர்கொள்வதாகவும், எனவே இரு நாடுகளுக்கிடையிலும் நிபுணத்துவங்களை பரிமாறிக்கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாகவும் இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்தார்.  

ஜனாதிபதியை இஸ்ரேலிய தூதுவர் ஏற்கனவே சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தகது.   

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதரக அரசியல் ஆலோசகர், நோவா ஹாகிமும் கலந்துகொண்டார்.