--> -->

மகாவலி தொடர்பான இரு நூல்கள் ஜனாதிபதி தலைமையில் வெளியீடு

ஜூலை 25, 2019

ரஜரட்டை, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீரை திறந்து விடுவதற்கான ஆயத்தங்கள் தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

மொரகஹகந்த பாரிய நீர்ப்பாசனத் திட்டத்திற்குரிய பிரதான நீர்த்தேக்கங்களுள் ஒன்றான களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் எதிர்வரும் மாதமளவில் அதன் பூரண நன்மைகளை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்துக்கு உட்பட்ட வடமேல் மாகாணத்திற்கு நீரைக்கொண்டு செல்லும் வடமேல் கால்வாய், கிழக்கு மாகாணத்திற்கு நீரைக்கொண்டு செல்லும் இகள எலஹெர கால்வாய் மற்றும் மினிப்பே கால்வாயின் அபிவிருத்தி செயற்பாடுகளும் துரிதமாக இடம்பெற்று வருகின்றது என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

“மஹவெலிய – சங்ஹிந்தியாவே கங்காவ” (மகாவலி – நல்லிணக்க நதி) மற்றும் “95ன் பசு மஹவெலி” (95ஆம் ஆண்டின் பின்னரான மகாவலி) நூல் வெளியீட்டு விழா இன்று (24) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மகாவலி அபிவிருத்தி திட்டம் 40 ஆண்டுகளாக தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை வழங்கிவருவதுடன், எதிர்காலத்திலும் அப்பாரிய பங்களிப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

மகாவலி நீர்ப்பாசன புரட்சியின் மிக முக்கிய வேலைத்திட்டமான மொரகஹகந்த – களுகங்கை வேலைத்திட்டம் இலங்கை வரலாற்றில் விவசாயத்தின் அபிவிருத்தி கருதி முன்னெடுக்கப்பட்ட மாபெரும் வேலைத்திட்டம் என்றும் அதனை நிறைவுசெய்ய கிடைத்தமை தனது வாழ்வில் கிடைத்த பெரிய பாக்கியம் என்றும் தெரிவித்தார்.

நிலத்தையும் நீரையும் பகிர்ந்துகொள்ள முடியாமல் இரத்தம் சிந்திய விவசாயிகளை தான் கண்டுள்ளதாகவும் உலர் வலய விவசாயிகளின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாகவும் மொரகஹகந்த – களுகங்கை பாரிய வேலைத்திட்டத்தை தேசத்திற்கு உரித்தாக்க முடிந்தது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மொரகஹகந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பொறியியலாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள், தொழிநுட்ப அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வரையிலான அனைவருக்கும் ஜனாதிபதி அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.

1995 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் மகாவலி திட்டத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலான எழுத்து மூலமான வெளியீடுகள் காணப்படாத குறையினை பூர்த்தி செய்யும் வகையிலேயே மகாவலி அதிகார சபையின் தலைமையில் “95ஆம் ஆண்டின் பின்னரான மகாவலி” நூல் எழுதப்பட்டுள்ளது. மேலும் மத்திய மலைநாடு, ரஜரட்டை, வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு நீரினைக் கொண்டுசென்று ஆயிரக்கணக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் தாகத்தை தீர்க்கும் மகாவலி நதியின் பயணமே “மகாவலி – நல்லிணக்க நதி” என்ற நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சிறந்த நீர் முகாமைத்துவ நிபுணரும் 1976 முதல் காலத்திற்கு காலம் மகாவலி திட்டத்துடன் இணைந்து செயற்பட்ட கலாநிதி எம்.யூ.ஏ.தென்னகோன் இந்நிகழ்வில் தலைமை உரையாற்றினார்.

நூல் வெளியீட்டுக் குழுவின் தலைவரும் இலங்கை மன்றத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சரத் கோங்கஹகே மற்றும் இரு நூல்களின் பிரதான தொகுப்பாளர் கே.ஆரியத்துங்க உள்ளிட்ட நூல் வெளியீட்டு குழுவினரால் ஜனாதிபதி அவர்களிடம் நூற்கள் கையளிக்கப்பட்டது.

காமினி ஜயவிக்ரம பெரேரா, பீ.தயாரத்ன, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, வீரகுமார திசாநாயக்க, சாந்த பண்டார ஆகியோர் உள்ளிட்ட மகாவலி திட்டத்துடன் இணைந்து செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, மாகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், அறிஞர்கள், கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மகாவலி மற்றும் சுற்றாடல் துறையுடன் தொடர்புடைய பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி: pmdnews.lk