--> -->

தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு இராணுவத்தின் புதிய படைப் பிரிவு ஆரம்பம்

நவம்பர் 19, 2020

மூன்று படையணிகளை உள்ளடக்கிய இலங்கை இராணுவ பொறியியலாளர்களின் பல் திறன் மற்றும் பன்முகத் திறன் கொண்ட புதிய முதலாவது இராணுவ பொறியியலாளர் பிரிவு  நேற்றைய தினம் ஸ்தாபிக்கப்பட்டது.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள இராணுவ பொறியியலாளர் பிரிவு பல்திறன் மிக்க பல பணிகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய  அனைத்து  வகையான தேசிய கட்டுமான பொறியியல் பணிகள், சிவில் -இராணுவ பணிகள், கண்ணிவெடி அகற்றுதல்  மற்றும் இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி தொடர்பான பணிகள், துரித அனர்த்த முகாமைத்துவ பணிகள், தளபதியின் பணிகள் என்பவற்றை  மத்தியஸ்த்தப்படுத்தல், பொறுப்பேற்றல், விநியோகித்தால் மற்றும் அவற்றை நிறைவேற்றுதல்  என்பவற்றை முன்னெடுக்கவுள்ளது.

பாதுகாப்பு படைகளின்  பிரதம அதிகாரியும் , இராணுவத்தின் தளபதியும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா,  மத்தேகொடையில் நிர்மாணிக்கப்படவுள்ள தலைமையக கட்டிடத்திற்கான  பெயர் பதாகையை திறந்து வைத்ததுடன்  நிர்மாணப் பணிகளை தொடக்கி வைக்கும் வகையில் புதிய கட்டிடத்திற்கான  அடிக்கல்ளையும் நாட்டினர்.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட  பொறியாளர்கள் பிரிவின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும்  வகையில் உத்தியோகபூர்வ ஏட்டில் இராணுவ தளபதி வைபவ ரீதியாக கையொப்பமிட்டார்.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட  பொறியாளர்கள் பிரிவுக்கான முதலாவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  2020 ஒக்டோபர் 28ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இப் புதிய பொறியியலாளர் பிரிவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சப்பர்ஸ் குடா ஒய்வு விடுதி வளாகத்தில்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேட்மிட்டன்  மைதானம் மற்றும் அனைத்து உபகரணங்களுடன் கூடிய  உடற்பயிற்சி கூடத்தையும்  இராணுவ தளபதி  திறந்து  வைத்தார். அத்துடன் இரசாயன அச்சுறுத்தல்கள், வெடிப்பொருட்கள் அகற்றுதலுக்கு எதிரான தமது எதிர் நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பாக  இராணுவ இரசாயன உயிரியல் கதிரியக்க மற்றும் அணு சக்தி  படை வீரர்களினால் காட்சிப்படுத்தப்பட்ட ஒத்திகை காட்சியையும் இராணுவ தளபதி கண்டுகளித்தார்.

"எமது பணம் வெளிநாடுகளில் பொருட்களை கொள்வனவு செய்வதில் செலவிடுவதற்கு  பதிலாக நாம் உயர் தொழில்நுட்பத்துடன் அதிநவீன இயந்திரங்களைப் பெற்று ஜனாதிபதியின் ஆசியுடன் முடிவுப்பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும்" என தெரிவித்த இராணுவ தளபதி, இராணுவத்தினரால்  குறைந்த செலவில் உயர்ந்த தரத்துடன் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவும்  நினைவுகூர்ந்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குனவர்தன,  பிரதி பதவி நிலை பிரதானி,  இராணுவத் தளபதி, இலங்கை இராணுவ தொண்டர் படைத் தளபதி, மேற்கு  பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி , கள பொறியியலாளர் தலைமை அதிகாரி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.