--> -->

இந்திய கடற்படை தளபதி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

டிசம்பர் 14, 2022

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை இன்று (டிசம்பர் 14) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.
 
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி மற்றும் தூதுக்குழுவினரை இராஜாங்க அமைச்சர் வரவேற்றதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
மேலும், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
 
இச்சந்திப்பினை நினைவுகூறும் வகையில் இராஜாங்க அமைச்சர் மற்றும் இந்திய கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
 
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உதவி இராணுவ இணைப்பு அதிகாரி கேர்ணல் துசித பண்டார மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பாதுகாப்பு) ஹர்ஷ விதானாராச்சி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.