--> -->

நாட்டில் 14,336 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு

டிசம்பர் 10, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 697 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30,074 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய  தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த மூன்று இலங்கையர்களும்  கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 357 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 219 பேரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 38 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 26,512 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 18,392  பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 14,336 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 144 ஆக  அதிகரித்துள்ளது.

படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 64 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 6,366 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.