--> -->

4வது சிஐஎஸ்எம் (CISM) சர்வதேச இராணுவ கடற்கரை கரப்பந்து விளையாட்டுச் சாம்பியன் 2023 கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் ஆரம்பமானது

பெப்ரவரி 13, 2023

சர்வதேச நாடுகளின் இராணுவ வீரர்கள் பங்குபற்றும் 4வது சிஐஎஸ்எம் (CISM) சர்வதேச இராணுவ கடற்கரை கரப்பந்து விளையாட்டுச் சாம்பியன் 2023 சுற்றுப்போட்டி கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப்படை உடற்பயிற்சி கூட வளாகத்தில் இன்று (12 பெப்ரவரி 2023) சம்பிரதாயபூர்வமாக இலங்கை விமானப்படையின் பிரதித் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சர்வதேசயளவில் நடைபெறும் இந்த முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன் இதில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் போட்டியிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் இடம்பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விளையாட்டுப் போட்டிகள் நாளை (13 பெப்ரவரி 2023) நீர்கொழும்பு கடற்கரையில் ஆரம்பமாகி 17 பெப்ரவரி 2023 வரை நடைபெறவுள்ளது. இப் போட்டியில் சர்வதேச அளவில் ஆயுதப் படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்களாக 7 நாடுகளின் விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுகின்றார்கள்.

சர்வதேச நாடுகளின் இராணுவ வீரர்கள் மற்றும் வீரான்கனைகளுக்கிடையே நட்புறவை மேலும் வளர்ப்பதற்கான முக்கிய இலக்கினைக் கொண்டு இந்த விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

மேலும், இந்த 4வது சிஐஎஸ்எம் (CISM) கரப்பந்து விளையாட்டுச் சாம்பியன் 2023 சுற்றுப்போட்டி இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் ஆதரவுடன் இலங்கை விமானப்படையால் நடத்தப்படுகிறது.

ஆரம்ப நிகழ்வில் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் நிஷாந்த திலகசிங்க, கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, சிஐஎஸ்எம் இன் பொதுச் செயலாளரும் இத்தாலிய கடற்படையின் கெப்டன் ரொபர்டோ ரெச்சியா, ஏற்பாட்டுக் குழு செயலாளர் குரூப் கெப்டன் கிறிஷாந்த பெர்னாண்டோ, இலங்கை விமானப்படை விளையாட்டு கவுன்சிலின் செயலாளர் குரூப் கெப்டன் எரந்த கீகனகே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீரான்கனைகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நன்றி - www.airforce.lk