--> -->

ஜப்பான் கடற்படை பிரதிநிதிகள் பதில் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ
பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்தனர்

ஜூலை 22, 2023
  • அமைச்சர் தென்னக்கோன் ஜப்பானிய கப்பலை பார்வையிட்டார்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) பிரதிநிதிகள் குழுவொன்று (ஜூலை 21) வெள்ளிக்கிழமை  பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

ரியர் அட்மிரல் நிஷியாமா தகஹிரோ தலைமையிலான குழுவினரை அமைச்சர் தென்னகோன் வரவேற்றதுடன்  அவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படைக்கு வழங்கிய உதவி மற்றும் ஒத்துழைப்புக்காக ஜப்பானிய கடற் படைக்கு அமைச்சர் தென்னக்கோன் இதன்போது நன்றி தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இலங்கைக்கு ஜப்பான் நல்கிய ஆதரவை நினைவுகூர்ந்த அவர், ஜப்பானிய அரசாங்கத்தின் நீண்டகால நட்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜப்பானிய அதிகாரிகள், இலங்கையின் சிறந்த விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தனர்.

கலந்துரையாடலின் முடிவில் அமைச்சர் தென்னகோன் மற்றும் ரியர் அட்மிரல் நிஷியாமா தகஹிரோ நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

வியாழக்கிழமை (ஜூலை 20) இலங்கையை வந்தடைந்த ஜப்பான் கடற் படையின் கப்பல் SAMIDARE இல் ஜப்பானிய பிரதிநிதிகள் வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்படையின் பிரதிப் பிரதம அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் - நடவடிக்கை ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று மாலை ஜப்பானிய கப்பலான SAMIDARE யை பார்வையிட அமைச்சர் தென்னக்கோன் கப்பலுக்கு விஜயம் செய்தார்.

கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் ஓகுமுரா கென்ஜி இருவரையும் வரவேற்றார். பின்னர் வருகை தந்த அதிதிகளுக்கு கப்பலை சுற்றிக்காட்டியதுடன், கப்பலின் திறன்கள் மற்றும் அதன் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

இதன் போது துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, சிரேஷ்ட ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஜப்பானிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.