--> -->

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர்
பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

மார்ச் 11, 2024

புதிய பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 11) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த புதிய பொலிஸ் மா அதிபரை ஜெனரல் கமல் குணரத்ன  வரவேற்றதுடன், சட்டம் மற்றும் ஒழுங்குடன் தேசிய பாதுகாப்பு விடயங்களில் முக்கியமாக கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மரியாதை நிமித்தமாக இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் அண்மையில் நியமிக்கப்பட்டமைக்கு  ​​பாதுகாப்புச் செயலாளர்  தனது  வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வினால் அண்மையில் நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோன், பெப்ரவரி 29 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்ந சந்திப்பை  நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம்  பரிமாறிக் கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதரவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.