--> -->

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,251 ஆக உயர்வு

ஜனவரி 04, 2021

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 403 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 44,773ஆக  அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு  மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய  தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 81 பேரும், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 56 பேரும்,  கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 30பேரும், ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 236 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 41,009 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 34,494 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

நாட்டில் 10,719 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளி நாடுகளிலிருந்து 77 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்களில்  43  பேர் சவூதி அரேபியாவிலிருந்தும் 27 பேர் கட்டாரிலிருந்தும் வருகைதந்தனர். இவர்கள் அனைவரும் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் இராணுவத்தினால் மேற்பார்வை செய்யப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வைரஸ் தொற்று முழுமையாக குணமடைந்த 535 பேர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,251 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட  7,309 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன்  படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 79தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 4,580 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.