எகிப்திய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
மே 27, 2025இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு அடெல் இப்ராஹிம், இன்று (மே 27) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
எகிப்திய தூதரை வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார். பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி (DSCSC) மூலம் கல்வி மற்றும் தொழில்முறை பரிமாற்றங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்த கலந்துரையாடலின்போது அவர்கள் கவனம் செலுத்தினர்.
பாதுகாப்பு கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச இராணுவ பயிற்சி திட்டங்கள் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடினர். நட்பு நாடுகளிடையே ஆழமான புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒரு தளமாக DSCSCஇன் சர்வதேச ஒத்துழைப்பு ஆய்வு கற்கைநெறியின் முக்கியத்துவம் தொடர்ப்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதில் எகிப்தின் ஆர்வத்தை எகிப்து தூதுவர் எடுத்துரைத்தார். எகிப்தின் தொடர்ச்சியான நட்பு மற்றும் ஆதரவிற்கு பாதுகாப்புச் செயலாளர் நன்றி தெரிவித்ததுடன், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டையும் வலியுறுத்தினார்.
பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதற்கும் இருவரும் உடன்பட்டனர். இச்சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ தொடர்பு அதிகாரியும் கலந்து கொண்டார்.