ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் மறைந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கான விதவைகள் மற்றும் அனாதை ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள் பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு
மே 30, 2025ஓய்வுபெற்ற போர் வீரர்களின் ஓய்வூதியம் மற்றும் மறைந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு விதவைகள் மற்றும் அனாதை ஓய்வூதியம் (W&OP) வழங்குவது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று (மே 30) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
ரஷ்ய-உக்ரைன் போருக்கு ஊதிய அடிப்படையில் இலங்கை ஓய்வுபெற்ற போர் வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான விடயங்கள் உட்பட பல தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட இலங்கை வீரர்கள் பற்றிய தகவல்கள் தொடர்பான விடயங்களும் ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஓய்வூதியம் அல்லது விதவைகள் மற்றும் அனாதை ஓய்வூதியம் செலுத்துவது தொடர்பான சாத்தியமான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கலந்துறையாடப்பட்டன.
அதன்படி, ரஷ்ய-உக்ரைன் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவ வீரர்கள் - காணாமல் போனவர்கள், போரின் போது இறந்தவர்கள் அல்லது தற்போது இரு தரப்பினராலும் போர்க் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் - பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதுடன் இவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த நபர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அல்லது பிற நிதி உதவித் திட்டத்தை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயுமாறு ஓய்வூதியத் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை கேட்டுக்கொண்டார்.
மே 28 மற்றும் 30 ஆகிய தினங்களில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற பொது தினத்தின் போது, ஓய்வூதியம் மற்றும் விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய பங்களிப்புகளை வழங்குவது தொடர்பாக ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எழுப்பிய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. ஓய்வுபெற்ற மற்றும் ஊனமுற்ற போர் வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து ஆதரவை வழங்கவும் பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் ரஷ்ய-உக்ரைன் மோதலின் போது காணாமல் போனதாகக் கருதப்படும் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.