அமெரிக்காவும் இலங்கையும் பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
நவம்பர் 14, 2025இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கும் வகையில், அமெரிக்காவும் இலங்கையும் இன்று (நவம்பர் 14) பாதுகாப்பு அமைச்சில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டன.
இந் நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) முன்னுரையாற்றினார்.
அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாக அமெரிக்க தூதுவர் அதிமேதகு Julie Chung மற்றும் மொன்டானா தேசிய காவல்படையின் பிரதி ஜெனரல் பிரிகேடியர் ஜெனரல் Trenton Gibson ஆகியோர் கையெழுத்திட்டனர். அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மாநில கூட்டுத் திட்டத்தின் (SPP) கீழ் மொன்டானா தேசிய காவல்படை, அமெரிக்க கடலோர காவல்படை மாவட்டம் 13 மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஒருங்கிணைக்கிறது.
பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஜயசேகர (ஓய்வு) தனது உரையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மையில் ஒரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது என்று கூறினார். இந்த முயற்சி நமது பரஸ்பர அர்ப்பணிப்பு, பகிரப்பட்ட மூலோபாய நலன்களை பிரதிபலிக்கிறது. மேலும் இந்த கூட்டாண்மை திறன் மேம்பாடு, கூட்டு பயிற்சி, மனிதாபிமான உதவி, அனர்த்த மீட்பு, சைபர் பாதுகாப்பு, அமைதி காப்பு நடவடிக்கைகள், CBRN மீட்பு மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டிற்கான புதிய வழிகளைத் திறக்கிறது. அமெரிக்காவின் தொடர்ச்சியான நட்பு, ஒற்றுமை மற்றும் தாராள மனப்பான்மை பாராட்டிற்குரியது , மேலும் இந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இலங்கை எதிர்பார்க்கிறது என்றார்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்க தேசிய காவல்படையுடன் கூட்டு சேர்ந்த 115 நாடுகளின் உலகளாவிய வலையமைப்பில் இலங்கையம் இணைந்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முதல் கூட்டு நடவடிக்கைகள் 2026 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது அனர்த்த மீட்பு, கடல்சார் கள விழிப்புணர்வு மற்றும் தொழில்முறை இராணுவக் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும். கூட்டுப் பயிற்சி, கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வை எதிர்ப்பதற்கான கடல்சார் ஒத்துழைப்பு, நெருக்கடி மீட்பு மற்றும் மனிதாபிமான உதவி, விமான நடவடிக்கைகள் மற்றும் இராணுவ-பொதுமக்கள் அனர்த்த தயார்நிலையை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த கூட்டு இயக்கத்தையும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், இரு தரப்பினரும் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள், விமானப்படை பிரதம அதிகாரி, இலங்கை கடலோர பாதுகாப்பு படை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் இரசாயன ஆயுதங்களுக்கெதிரான தேசிய ஆணையம் ஆகியவற்றின் பணிப்பாளர்கள் நாயகம், அமெரிக்க தூதரக அதிகாரிகள், மொன்டானா தேசிய காவல் படை பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.