கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு பணிகளை
பாதுகாப்பு செயலாளர் ஆய்வு செய்தார்

பெப்ரவரி 02, 2026

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் மேட்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்யம் நோக்கில், பாதுகாப்பு செயலாளர், எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோருடன் இன்று (02 பெப்ரவரி) அங்கு விஜயம் செய்தார்.

இந்தப் புனரமைப்பு திட்டம் இலங்கை விமானப்படையினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் சிறந்த வசதிகளை வழங்குவதும், அதன் சூழலை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். 

ஆய்வு விஜயத்தின் போது, மேட்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளின் முன்னேற்றம், அதன் தரம், காலக்கெடுக்களைப் பின்பற்றுதல் மற்றும் தற்போது எட்டியுள்ள முன்னேற்ற நிலை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை விமானப்படையின் கட்டிட பொறியியல் பணிகளுக்கான பணிப்பாளர் நாயகம், எயார் வைஸ் மார்ஷல் வஜிர சேனாதீர, திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விரிவான விளக்கத்தை வழங்கினார்.

இந்தத் திட்டம் தேசிய “Clean Sri Lanka” நிகழ்ச்சியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நகர்ப்புற உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதோடு சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் பொது வசதிகளை மேம்படுத்துதல் இதன் நோக்கங்களாகும். 

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தின் புனரமைப்பு திட்டம், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பயணிகள் வசதியை உயர்த்துவதோடு, நகரின் பொதுப் போக்குவரத்து சேவையின் செயல்திறனையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெற்று வரும் பணிகளை கவனமாக ஆய்வு செய்த பாதுகாப்பு செயலாளர், நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி திட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில், இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து சபை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.