HL-FRAC உயர்மட்டக் குழு கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது

பெப்ரவரி 05, 2026

வெளிநாட்டு நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழுவான HL-FRAC இன் மற்றொரு கூட்டம், கடந்த வாரம் (பிப்ரவரி 03) பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது. வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பை மீளாய்வு செய்வதுடன், அனைத்து நிவாரண நடவடிக்கைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதிப்படுத்தும் தீர்மானமான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாக அமைந்தது.

நிவாரண உதவிகளை திட்டமிட்ட, வெளிப்படையான மற்றும் சமத்துவமான முறையில் ஒதுக்கி விநியோகிப்பது தொடர்பாக குழு உறுப்பினர்கள் விரிவாகக் கலந்துரையாடினர். அத்துடன், இந்நிவாரணங்கள் குறித்த சமூகங்களுக்கு பயனளிப்பதோடு, எதிர்கால விநியோகத் தேவைகளின் முகாமைத்துவத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கிடையிலும் பயனுள்ள ஒத்துழைப்பு அவசியம் எனக் குறிப்பிட்டார். வெளிநாட்டு நிவாரண உதவிகளின் பயன்திறனை அதிகரிப்பதற்காக, நிவாரண ஒருங்கிணைப்பு கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தேவையான அனைத்து அறிக்கைகள் மற்றும் விவரங்களை தாமதமின்றி ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு அவர் பணிப்புரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் HL-FRAC குழு உறுப்பினர்கள், அனர்த்த முகாமைத்துவ மையத்தின் (DMC) சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலக அதிகாரிகள், ஜனாதிபதி செயலக பிரதிநிதிகள் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.