--> -->

769 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினர்

ஜனவரி 22, 2021

இன்று ஜனவரி 22ஆம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 887 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 56,075 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த பதிமூன்று பேரும், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 337  பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 136 பேரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 71   பேரும், ஏனைய மாவட்டங்களை சேர்ந்த 327 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52,180ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 42,821 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 16,108 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெளி நாடுகளிலிருந்து 196 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 28  பேர் குவைட்டிலிருந்தும், 148 பேர் அவுஸ்திரேலியாவிலிருந்தும், 20  பேர் ஜப்பானிலிருந்தும் வருகைதந்துள்ளனர். இவர்கள் அனைவரும் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் இராணுவத்தினால் மேற்பார்வை செய்யப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 769 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,983 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 7,816 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 91 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 8,173  பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்வடைந்துள்ளது.