--> -->

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய ‘மொபைல் செயலி’ வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

செப்டம்பர் 06, 2019

வெகுஜன ஊடக அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று மாலை (செப்டம்பர், 05) இடம்பெற்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய ‘மொபைல் செயலி’ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இது முன்னோடி தேசிய ஒளிபரப்பு சேவையின் ஒன்பது தசாப்த கால வரலாற்றின் ஒரு மைல்கல் நிகழ்வு ஆகும்.

புதிய ‘மொபைல் செயலி’ ஆனது, உலகெங்கிலும் உள்ள வானொலி அலைவரிசை நேயர்களை அவர்களின் மொபைல் சாதனங்களில் மூன்று மொழிகளிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிரதான சேவைகளுடன் இணைக்க உதவுகிறது.

விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், மொபைல் ‘செயலியினை’ அதிகாரப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இதன் மூலம் நாட்டில் வானொலி ஒலிபரப்பு களத்தில் ஒரு புதிய தசாப்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

விழாவின்போது உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன, நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பெறுவதன் மூலம் இதுபோன்ற ஒரு ‘செயலியை’ கொண்டு வர ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டினார். கூட்டுத்தாபனம் தனது ஒன்பது தசாப்த கால வரலாற்றில் தேசத்திற்கு ஒரு சிறந்த சேவையை வழங்கியுள்ளது என்றும் வளர்ந்து வரும் போக்குகளுடன் போட்டியிட புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். புதிய ‘செயலியின்’ வடிவமைப்பில் உதவிய மற்றும் அங்குரார்ப்பண நிகழ்வினை ஏற்பாடு செய்த அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர, அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு.நாலக கலுவேவ, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தலைவர் திரு. மாலக தல்வததே உள்ளிட்ட கூட்டுத்தாபன அதிகாரிகள், பணிப்பாளர் நாயகம் திரு.ஏரானந்த ஹெட்டியாராச்சி, செயல் பணிப்பாளர் திரு. ஹெரல் சேனாதீர, அனுசரணையாளர்கள் , சிரேஷ்ட கூட்டுத்தாபன அதிகாரிகள், பிரபல கலைஞர்கள் மற்றும் விஷேட அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.