--> -->

விமானப்படையினரின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தின கொண்டாட்டங்கள்

ஒக்டோபர் 02, 2019

உலக சிறுவர் தினத்தையொட்டி இலங்கை விமானப்படையின் கொழும்பு ரைபல் கிரீன் மைதானத்தில் சிறுவர் தின நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிகழ்வு இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி டயஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இதில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார்  790 சிறுவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யட்டிருந்தன. விளையாட்டு வலயம், லயன் கிங் பகுதி, விமானப்படை மோப்ப நாய்களின் சாகச காட்சி உள்ளிட்ட போட்டி நிகழ்வுகளில் சிறுவர்கள் கலந்து கொண்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்வுகளின் ஒரு பகுதியாக வவுனியாவைச் சேர்ந்த மக கச்சகொடி அரசினர் பாடசாலையைச் சேர்ந்த சுமார் ஐம்பத்து மூன்று  மாணவர்கள் தலைநகர் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இது அவர்கள் தலைநகர் பகுதிக்கு விஜயம் செய்த  முதலாவது சந்தர்ப்பமாக அமைந்ததுடன் அவர்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவத்தையும் பெற்றுக்கொடுத்தது. இக் குறித்த மாணவர்கள், சிறுவர்கள் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முன்னர் கொழும்பு ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமானப்படை அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.

இந்நிகழ்வுகளின் ஒரு பகுதியாக  நவகத்தேகம ரலபனாவ ஆரம்ப பாடசாலையின் கஷ்டத்தினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு புத்தக நன்கொடை ஒன்று  விமானப்படை சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில் விமானப்படை தளபதி கலந்து கொண்டு பரிசுப்பொதிகளை வழங்கி வைத்தார்.

அத்துடன், சேவா வனிதா பிரிவினால்  ஏற்பாடுசெய்யப்பட்ட  'குவன் கெகுலு சித்தம்'  சித்திர போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய சிறுவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதன் மற்றுமொரு சிறப்பம்சமாக இந்நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் பெறுமதியான பரிசுப்பொருட்கள் சேவா வனிதா பிரிவினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் விமானப்படை நிலையங்களின் கட்டளை தளபதிகள், சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள், சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.