--> -->

கடல் வளங்களை சட்டவிரோதமாக வைத்திருந்த நபர்கள் கடற்படையினரால் கைது

ஒக்டோபர் 03, 2019

கடல் கியூகம்பர்  மற்றும் சங்குகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக வைத்திருந்த மற்றும் கொண்டு சென்ற பலரைக் இலங்கை கடற்படை  வீரர்கள் கைது செய்தனர்.கடந்த  புதன்கிழமை (ஒக்டோபர், 02) கடற்படை  வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில்  சுண்டிகுளம் பகுதியில்  550 கடல் கியூகம்பர்   மற்றும் 04 சங்குகளை வைத்திருந்த  மூன்று நபர்களை கைது செய்ததாகவும், ஒரு டிங்கி இழைப் படகு, ஒரு  மோட்டார் இயந்திரம் மற்றும் சில மீன்பிடி கருவிகள் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை (01), தலைமன்னார்  உருமலை பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது   226 சங்குகளை முறையான  ஆவணங்கள் இல்லாமல் பரிமாற்றிய சந்தேக நபரை கடற்படை  வீரர்கள் கைது செய்தனர்.

இதே தினம்   சின்னகுடியிருப்பு காவல்துறையுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மற்றொரு சந்தேகநபர் 658 சங்குகளுடன் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க் கிழமையன்று   கிழக்கு பிராந்திய சேனைவழி பிரதேசத்தில்  சட்டவிரோத  மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 05 பேரை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட  பொருட்கள் எனபன  மேலதிக நடவடிக்கைகளுக்காக  கடற்தொழில் திணைக்கள  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்தொழில்  மற்றும் நீரியல்வள சட்டத்தின் பிரகாரம் , 70 மி.மீ க்கும் குறைவான விட்டம் கொண்ட சங்குகளை விற்பனை செய்தல், கொண்டு செல்லல் அல்லது ஏற்றுமதி செய்வதற்கான நோக்கத்துடன் கொள்வனவு செய்தல், பிறருக்கு காட்சிப்படுத்தல் என்பன  தடைசெய்யப்பட்டுள்ளது.

இதற்கேற்ப நாட்டின் கடல்வாழ் உயிரினங்களையும் வளங்களையும் பாதுகாப்பதில் இலங்கை கடற்படை உறுதியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.