--> -->

செயற்கைக்கோள் தகவல்கள் பிரயோகம் மூலம் இலங்கை கடற்படையினரால் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு

மார்ச் 05, 2020
  • 400 கிலோ ஹெரோயின் மற்றும் 100 கிலோ ஐஸ் ரக போதைப்பொருளை கொண்டுசென்ற மூன்று படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்
  • அண்மையில் கடற்படை நடவடிக்கைகளின் போது ரூ.  18 பில்லியன் பெறுமதியான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு  ஆகியன  இணைந்து மூன்று வெளிநாட்டு மீன்பிடி இழுவைப் படகுகளில்  கடத்திச் செல்லப்பட்ட 400 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 100 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர். 25 நாட்களாக இடம்பெற்ற ஒன்றிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்படி போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.  நேற்றையதினம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களே இதுவரை கடற் பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட  போதைப்பொருட்களில்  அதிகூடிய அளவாகும்.   

600 கடல் மைல் தொலைவில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 16 போதைப் பொருள் கடத்தல்காரர்களை கொண்ட இரண்டு மீன்பிடி படகுகள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு  போதைப்பொருட்களை  கைப்பற்ற புலனாய்வுத்துறையின்  தகவல்களை தவிர, சந்தேகத்திற்குரிய சிறிய படகுகளின் நகர்வினை  கண்டறிய பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் ஆதாரங்களுடன்   செயற்கைக்கோள் (சாட்டிலைட்) தகவல்களையும் பயன்படுத்தியதாக  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும்  மனித மற்றும் போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்காக, இலங்கை கடற்படை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் காரணமாக  தற்போது கடத்தல்காரர்களுக்கு இச்செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் கடினமான ஒன்றாக அமையும் என அவர்  தெரிவித்தார்.

திக்கோவிட்ட மீன்பிடி   துறைமுகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கடற்படை தளபதி   "இந்த கடத்தலுடன்  தொடர்புடைய வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த கடத்தல் நடவடிக்கை  தொடர்பாக கருத்து  வெளியிட்ட  பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு பொறுப்பான  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மடவத்த,  நாட்டில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக சர்வதேச, ஆசிய மற்றும் உள்நாட்டில் உள்ள மூன்று முக்கிய பிராந்தியங்களைஅடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், போதைபொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கின்ற நிலையில், இந்த கடத்தல் நடவடிக்கையுடன்  சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.

போதைபொருள் கடத்தலுக்கு எதிரான கண்காணிப்பு ரோந்து பணிகளில்   இலங்கை கடற்படை கப்பல்களான சமுத்ரா, சயுரல ஆகியன   ஈடுபடுத்தப்பட்டிருந்தன. எந்த  ஒரு நாட்டினதும்  கொடிகள் அற்ற நிலையில்   மீன்பிடி படகுகள் என்ற  போர்வையில் இக்கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

போதைப் பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து போதைப் பொருள் பொதிகளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த வெளிநாட்டு படகு இருந்த இடத்தை நோக்கி  சென்றுக்கொண்டிருந்த இலங்கை  மீன்பிடி படகுகளை  கடற்படையினர்  நன்கு அறிந்துவைத்திருந்தனர்.

கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டுவரப்படும் மொத்த போதைப் பொருளையும் கைப்பற்றுவது என்பது  நடைமுறைச் சாத்தியமான ஒரு  விடயமல்ல.  ஆனால் நாட்டிற்குள் அதன் நுகர்வினை குறைக்க நடவடிக்கை எடுக்கும் " என வைஸ் அட்மிரல் டி சில்வா தெரிவித்தார்.

இந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை முறியடிப்பானது, அரசாங்கத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற உயர்மட்ட அணுகுமுறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த குழு நடவடிக்கையாகும். " எதிர்கால சந்ததியினருக்கு போதைப் பொருள் இல்லா தேசத்தை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு" என அவர் மேலும்  தெரிவித்தார்.       

வாராந்த உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களில்  தேசியப் பாதுகாப்பையடுத்து, கவனம் செலுத்தப்படும் அடுத்த விடயம்  போதைப் பொருள் கடத்தல் தொடர்பானது எனவும் அவர் தெரிவித்தார்.