--> -->

கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளையை முறியடித்த பொலிஸ் கான்ஸ்டபிள் விபத்தில் பலி

ஜூன் 14, 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த அரச புலனாய்வு பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சித்தும் அழகப்பெரும விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி தும்முல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று (14) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

கடந்த 11 ஆம் திகதி இரவு 11 மணியளவில் தும்முல்ல பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் எதிர் திசையிலிருந்து வேகமாக வந்த டிபென்டர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பௌ;ளது.

விபத்தில் படுகாயமடைந்த இரு பொலிஸாரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் இவர்களில்  பொலிஸ் கான்ஸ்டபிள் சித்தும் அழகப்பெரும அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை  5 மணியளவில் உயிரிழந்துள்ளாதாக வைத்தியசாலை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

அனுருத்த ரத்வத்தை குடும்பத்தைச் சேர்ந்த தரிந்து கடுகஹ ரத்வத்த என்ற 24வயதுடைய சட்ட கற்கை மாணவரே அதிக போதையில் டிபண்டரில் வந்து இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சித்தும் அழகப்பெரும, கடந்த 09ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருத்துவர் ஒருவரினால் 78 இலட்சம் ரூபாய் பண கொள்ளையிடப்பட்டு தப்பிச் சென்ற போது சந்தேக நபரை பின்தொடர்ந்து மடக்கிப் பிடித்து கைது செய்த திறமையான பொலிஸ் அதிகாரியாவார்.