--> -->

மழையுடன் கூடிய வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

ஜூலை 20, 2020

நாட்டின் வளிமண்டலத்தில் நிலவும் தாழமுக்கம் காரணமாக மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு
மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் 150 மிமீ க்கும் மேற்பட்ட கனமழை பொழிவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பு அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும் களுத்துறை முதல் பொத்துவில் ஊடாக காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை கடல் பரப்புகளில் அலையின் உயரம் 2 முதல் 2.5 வரை இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே கடலில் பயணிப்போர், மீனவ சமூகம் மற்றும் கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆகியோர் இவ்விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.