--> -->

திடீர் சுகவீனமுற்ற மீனவரை சிகிச்சைக்காக கடற்படையினர் கரைக்கு அழைத்து வருகை

ஆகஸ்ட் 04, 2020

மிகக்கடுமையாக சுகவீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வர இலங்கை கடற்படையினர் உதவி அளித்துள்ளனர்.

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 57வயதுடைய மீனவர் ஒருவர், காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 'யசிரு புதா' எனும் மீன்பிடி படகில் ஆழ்கடல் மீன்பிடிக்காக ஜூலை மாதம் 29ஆம் திகதி சென்றிருந்தார்.

காலியின் தென் கிழக்கு கடற் பிராந்தியத்தில் சுமார் 50 கடல் மைல் தொலைவில் மீனவர் ஒருவர் நெஞ்சு வலியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினால் இலங்கை கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கடற் பிரதேசத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையினர், நோயாளிக்கு முதலுதவியளித்ததுடன் நோயாளியை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்து மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.