--> -->

வைரஸ் தொற்று குணமடைந்த 537 பேர் வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

நவம்பர் 08, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 449 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களின் 445 பேர் உள் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய நான்கு பேரும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த இலங்கை பிரஜைகள் எனவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  9, 941 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 1,041 பேர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் எனவும் 1,007 பேர் போலியகொடை மீன் சந்தை உடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 7,893 பேர் அவர்களுடன் நெருக்கமாக தொடர்புகளைப் பேணியவர்கள் எனவும் அம் மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான 412 பேர் மற்றும் அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணிய 3,887 பேர்  தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாகவும்  மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கட்டார் நாட்டில் இருந்து வருகை தந்த இலங்கையர்கள் 17 பேர், விமான நிலைய நடவடிக்கைகள் பூர்த்தியானதன் பின்னர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக முப்படையினரால் நிர்வாகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 63,784 பேர் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை, முப்படையினரால்  நிர்வகிக்கப்படும் 28 தனிமைப்படுத்தல் மையங்களிலில் 2,454 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை கொத்தணியில் தொற்றுக்குள்ளான 537 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு நாட்டில் இதுவரை 592,218 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் மாத்திரம் 11,620 பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.