--> -->

5711 கிலோ உலர் மஞ்சள் கடற் படையினரால் கைப்பற்றப்பட்டது

நவம்பர் 08, 2020

கடற் படையினரால் நாட்டின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 5711 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய, வடமத்திய கடற் பிராந்திய கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது குதிரைமலை முனைக்கு அப்பால் உள்ள சர்வதேச கடல் எல்லையில் வைத்து உள்நாட்டு படகு ஒன்றிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில் 78 பொதிகளில் போது செய்யப்பட்டிருந்த சுமார் 3218 கிலோ கிராமுக்கு அதிகமாக உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது.

இதன்போது கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இலங்கை பிரஜைகளும் நான்கு வெளிநாட்டு பிரஜைகளும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால்  மீட்கப்பட்டுள்ளது. இதற்கமைய முகத்துவாரம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1256 கிலோகிராமும் கல்பிட்டி துடுவா பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1237 கிலோ கிராமும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் கல்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும்  26 மற்றும் 28 வயது உடையவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.