--> -->

வத்தளை, ஹூனுபிட்டிய பிரதேசத்தின் வீதிச் சோதனைச் சாவடியில் கடற்படையின் சமிக்ஞையை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோம் மேற்கொண்டுள்ளனர்.

மே 12, 2019

சந்தேகத்திற்கிடமான வாகம் ஒன்றின் நடமாட்டம் தொடர்பாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சோதனை மேற்கொள்ளும் பொருட்டு வத்தளை, புகையிரத கடவைக்கு அருகாமையில் வத்தளை, அவரியவத்த மற்றும் ஹூனுபிட்டிய வீதி ஆகியவற்றினை உள்ளடக்கியதாக மூன்று வீதிச் சோதனைச் சாவடிகளை அமைந்துள்ளனர்.

இதன்பிரகாரம், நேற்று (மே, 11) அதிகாலை ஒரு மணியளவில் ஹூனுபிட்டிய பிரதேசத்திலிருந்து வருகை தந்த கார் ஒன்றை சோதனையிடும் பொருட்டு நிறுத்துமாறு வழங்கிய சமிக்ஞை மீறி அந்த கார் கடமையில் இருந்த கடற்படை வீரரை மோதிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது மற்றைய வீரர் குறித்த வாகனத்தை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தின்போது படுகாயடைந்த சாரதியை உடனடியாக வத்தளை பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஊயிரிழந்தவர் வத்தளையை சேர்ந்து 34 வயதுடையவர் என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளைஇ மேற்படி சம்பவம் இடம்பெற்ற அதேசோதனைச் சாவடி ஊடாக அதிகாலை 1.50 மணியளவில் மற்றுமொரு கார் படையினரின் சமிக்ஞையை மீறி செல்ல முற்பட்டுள்ளது. அந்த காரையூம் நிறுத்தும் பொருட்டு கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் காருக்கு சேதம் ஏற்பட்டுள்ள அதேசமயம் எவரும் காயமடையவில்லை. விசாரணையின் போது குறித்த காரை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது. அவர் கிரிபத்கொடை பொலிஸாரினால் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக நேற்று (மே, 11) கொள்ளுபிடிய ஊடக நிலையத்தில் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, அனைத்துவிதமான வெடிபொருட்களையும் ஒப்படைக்கும் வகையில் 11ஆம் திகதி காலை 06.00 மணிமுதல் 14ஆம் திகதி காலை 06.00 மணி வரைக்குமான மூன்று நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எவராவது இவ்வாறான வெடி பொருட்களை உரிய அனுமதிப்பத்திரம் இல்லாமல் அல்லது சட்ட விரோதமாக அல்லது வேறு ஏதாவது முறைகளில் பெறப்பட்டு அவற்றை வைத்திருப்பவர்கள் இது தொடர்பாக அருகிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அல்லது பொது பொலிஸ் குழு அதிகாரிகள் ஊடாக அறிவிக்குமாறும் பொலிஸார் உரிய பகுதிக்கு விரைந்து வெடி பொருட்களை கைப்பற்றுவதட்கான நடவடிக்கையினை மேற்கொள்வர்எனவும், இது தொடர்பாக நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் பெற்றோரை இழந்த இடம்பெயர்ந்த குழந்தைகளின் தகவல்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். விவரங்கள் சேகரிக்கப்பட்டதும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆலோசனைகள் பெறப்பட்ட பின்னர், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது தொடர்பான தகவல்களை பின்வரும் தொடர்பு இலக்கங்கள் மூலம் வழங்கலாம்.

011 244 44 44

011 233 70 39

011 233 70 41

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் பொலிஸ் காவலரணில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் சனிக்கிழமை (11) விடுவிக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாத குழுவினரின் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு இக்கொலை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய பின்னரே இவ்வாறு விடுவிக்கப்பட்டதாகவும், வவுனியா சோதனைச் சாவடியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்து அவர்களுக்கு வழங்கப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை ஆகியவற்றுடன் இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.