--> -->

நாட்டில் இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளான 15,815 பேர் குணமடைவு

நவம்பர் 27, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 559 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22,027 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 553 பேரில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 253 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 65 பேரும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேரும் உள்ளடங்குகின்றனர்.

மேலும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஆறு இலங்கையர்களும் ஒரு வெளிநாட்டவரும் நேற்றைய தினம் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை18,487 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 12,437 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 12,105 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 369 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கொவிட்-19  பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 305 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் கட்டார் நாட்டிலிருந்து வருகை தந்த 50 பேர், டுபாய் நாட்டிலிருந்து வருகை தந்த 52 பேர், அவுஸ்திரேலியா நாட்டிலிருந்து வருகை தந்த 191 பேர், ஜப்பான் நாட்டிலிருந்து வருகை தந்த 12 பேரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 47 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 5,114 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான கொழும்பு 08, பேலியகொடை மற்றும்  பம்பலபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99ஆக  பதிவாகியுள்ளது.