--> -->

இந்திய கடற்படையின் உயர் தொழில்நுட்ப இலகுரக ஹெலிகாப்டர் இலங்கை வருகை

ஒக்டோபர் 23, 2023

இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் ஒன்று அண்மையில் (ஒக்.19) இலங்கையை வந்தடைந்தது.

இலங்கை விமானப்படையின் விமானிகள் மற்றும் இலங்கை கடற்படையின் வீரர்களுக்கு கப்பல்களில் ஹெலிகொப்டர் தரையிறங்கும் நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் என விமானப்படை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த கூட்டுப் பயிற்சித் திட்டம் இந்திய மற்றும் இலங்கை ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மற்றொரு பகுதியாகும்.

உயர் தொழில்நுட்ப இலகுரக ஹெலிகாப்டர் தொடர்பான நவீன பயிற்சிகளை விமானப்படையின் விமானிகளுக்கு அறிமுகப்படுத்தி துணை விமானி அனுபவத்தை வழங்குவதே இந்த பயிற்சியின் பிரதான நோக்கமாகமாகும்.

மேலும், இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல்களில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் அத்தியாவசிய பயிற்சியிலும் ஈடுபடவுள்ளதாகவும் விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கடற்படையால் தற்போது பயன்பாட்டில் உள்ள இந்த வகை ஹெலிகாப்டர் ஒன்று கடந்த ஆண்டு (மார்ச் 23, 2022) இதேபோன்ற பயிற்சிக்காக இலங்கைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் பயிற்சி நடவடிக்கைகளின் போது, இலங்கை விமானப்படையின் விமானிகள் குறித்த ஹெலிகாப்டரில் துணை விமானி பயிற்சிகள் பெற்றுள்ளதுடன் இலங்கை கடற்படையின் வீரர்கள் கப்பலில் தரையிறங்கும் பயிற்சிகளை பெற்றுள்ளதாகவும் அத் தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.