--> -->

போர்க்களத்தில் போர் வீரர்களுடன் தோளோடு தோள் நின்று அவர்களின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து அவர்களின் மன உறுதியை மேன்படுத்துவதற்கு அர்பணிப்புடன் சேவையாற்றிய இராணுவ மருத்துவர்களின் சேவை பாராட்டுக்குரியது - பாதுகாப்பு செயலாளர்

மார்ச் 16, 2024

இந்த ஆண்டு இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியானது "பல்வகைப்படுத்தலின் மூலம் இராணுவ மருத்துவத்தில் சிறந்து விளங்குதல்" என்ற தலைப்பை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இராணுவ மருத்துவத்தில் சிறந்து விளங்குவது இராணுவ மருத்துவத்தில் வெறும் அறிவு மற்றும் திறன்களை வளர்ப்பதன் மூலம் அடைய முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் ஏழாவது வருடாந்த கல்வி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கல்வி மாநாடு வெலிசர கடற்படை 'வேவ் என்' லேக்' நிகழ்வு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் கௌரவ டாக்டர் ரமேஷ் பத்திரன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் ஏழாவது வருடாந்த கல்வி மாநாடு மார்ச்16 மற்றும்17ஆம் திகதிகளில் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டல் வளாகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம அதிதியையும் ஏனைய கௌரவ அதிதிகளையும் இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் தலைவரான சத்திரசிகிச்சை நிபுணர் கொமடோர் நந்தனி விஜேதொரு வரவேற்றார்.

இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியானது இராணுவ மருத்துவ சேவைகளின் பிரதானிகளை உள்ளடக்கிய செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. மேலும் அதன் ஏழாவது வருடாந்த கல்வி அமர்வின் போது இலங்கை மற்றும் வெளிநாட்டு இராணுவ மருத்துவ நிபுணர்களுக்கு இடையில் அனுபவப் பரிமாற்றம், அறிவு மற்றும் புரிந்துணர்வு பரிமாற்றத்திற்கான தளத்தை இம் மாநாடு ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித மஹிபால, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி, இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி, முப்படைகளின் சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் செயற்குழு உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.