--> -->

சேவைக் காலம் முடிந்து செல்லும் துருக்கிய
தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஏப்ரல் 05, 2024

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான துருக்கிய  தூதுவர் அதிமேதகு டெமெட் செகெர்சியோகுளு இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஏப்ரல் 5) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சிக்கு வருகை தந்த துருக்கிய  தூதுவரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

துருக்கிய  தூதுவரின் சேவையைப் பாராட்டிய ஜெனரல் குணரத்ன, அவரது பதவிக் காலத்தில் இலங்கைக்கு துருக்கி வழங்கிய உதவிகளுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தான் கடமையாற்றிய காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்காக டெமெட் செகெர்சியோகுளு பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

துருக்கிய தூதுவர் செகெர்சியோகுளு அவர்கள் 1995இல் துருக்கிய வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றியதுடன், 2020ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 07ஆம் திகதி இலங்கைக்கான துருக்கிய தூதுவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாதுகாப்பு செயலாளரினால்  டெமெட் செகெர்சியோகுளு அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதரவும் கலந்துகொண்டார்.