மனித-யானை மோதலை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஜூன் 02, 2025புத்தளம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித-யானை மோதலைத் தணிப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிவது குறித்து கலந்தாலோசிக்க, பொது நிர்வாகம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபேரத்ன தலைமையில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களின் பங்குபற்றலுடன் இன்று (ஜூன் 2) கொழும்பு 5, நாரஹேன்பிட்டை நில மெதுரவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் அழிவுகளின் தாக்கத்தை நிவர்த்தி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது, குறிப்பாக பல்லம, ஆரச்சிகட்டுவ, ஆனமடுவ, புத்தளம், வண்ணாத்திவில், கருவலகஸ்வெவ மற்றும் நவகத்தேகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்களை ஆக்கிரமித்துள்ள யானைகளை வில்பத்து மற்றும் தப்போவ பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கு மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த முயற்சிகளில் முப்படைகளின் பங்களிப்பும் கலந்துரையாடலின் போது பாராட்டிற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட முக்கிய விடயங்கள்; யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதிகளை ஒதுக்குதல், மேம்பட்ட யானை வேலி மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு வழிமுறைகளைப் பயன்படுத்துதல், நிலையான மனித - யானை சகவாழ்வை மேம்படுத்துவதற்கான சமூக விழிப்புணர்வு முயற்சிகள்.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அரச பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.