இலங்கை பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் அமெரிக்க பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு சந்திப்பு
ஜூன் 26, 2025அமெரிக்க பாதுகாப்பு நிர்வாக நிறுவனத்தின் (US Institute for Security Governance) (ISG) பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோருடன் வெவேறு சந்தர்ப்பங்களில் சந்தித்தது. இதன்போது இராணுவ திறன் வளர்த்தல் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
ISG பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று மாலையும் (ஜூன் 25) மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) இன்றும் (26) சந்தித்தது. இலங்கையின் இராணுவ நிறுவனங்களுடன் எதிர்கால ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மேலதிக வழிகாட்டுதலை நாடும் அதே வேளையில், இந்நிறுவனத்தின் தற்போதைய முயற்சிகள் பற்றிய கண்ணோட்டத்தை வழங்குவதை இந்த உயர் மட்ட ஈடுபாடுகள் நோக்கமாகக் கொண்டிருந்தன.
பாதுகாப்பு நிர்வாகம், பாதுகாப்பு மேலாண்மை, செயல்பாட்டு திட்டமிடல், வள மேலாண்மை, சைபர் பாதுகாப்பு, மனிதவள மூலதன மேற்பார்வை மற்றும் தொழில்முறை இராணுவ கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. சிறப்பு கல்வி மற்றும் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் விரிவான அறிவுத் தளத்தை உருவாக்குவதிலும் நிலைநிறுத்துவதிலும் திறன்களை வலுப்படுத்துவதிலும் ISG குழு அதன் பங்களிப்பை வலியுறுத்தியது.
இலங்கையின் பாதுகாப்புத் துறைக்கு ஆதரவு வழங்குவதில் குறிப்பாக தொழில்முறை, நிறுவன செயல்திறன் மற்றும் மனிதவள மேம்படுத்துவதில் ISG மேற்கொண்ட முயற்சிகளை பிரதி அமைச்சரும் பாதுகாப்புச் செயலாளரும் பாராட்டினர். அவர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததுடன், எதிர்கால ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் விருப்பம் தெரிவித்தனர்.
ISG குழுவில் அதன் பிராந்திய திட்டத் தலைவர் மைக்கேல் சார்ல்ஸ் ரெம்போல்ட் மற்றும் நாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் மெட் ஏஷ்லி ஆகியோருடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள், உதவி பாதுகாப்பு ஆலோசகர் செத் நெவிஸ்; பாதுகாப்பு ஒத்துழைப்புத் தலைவர் அலுவலகத்தின் லெப்டினன்ட் கொமாண்டர் ரோஸ் லெரி ஆகியோர் இணைந்திருந்தார்.