கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்க இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர் விஷேட நடவடிக்கை

ஜூன் 28, 2025

கொக்கல பகுதிக்கு தெற்கே கடற்கரையில் ஐந்து மீனவர்களை ஏற்றிச் சென்ற ஒரு இழுவைப் படகு இன்று (ஜூன் 28) காலை கவிழ்ந்தது, மேலும் அளுத்கமாவில் கரை ஒதுங்கிய மற்றொரு வெற்று டிங்கி படகு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து, பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க உடனடி மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டன.

மேற்படி இரு விபத்துக்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வு) மீனவர்களை உடனடியாக கண்டுபிடித்து மீட்பதற்காக விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படைக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இதனையடுத்து, துரிதமாக செயல்பட்ட இலங்கை கடற்படை, சம்பவ இடத்திற்கு (P491)ரக அதிவேக தாக்குதல் கப்பலை (FAC) அனுப்பியது. ஊடனடியாக மீனவர் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். கடற்படையின் மற்றுமொரு (FAC) P420 ரக அதிவேக தாக்குதல் படகு, சுழியோடி குழுவையும் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மீன்பிடி படகு விபத்தில் உயிரிழந்த மூன்று மீனவர்களின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மற்ற நபரையும், படகின் பணியாளர்களையும் தேடி கண்டுபிடிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்காக இலங்கை விமானப்படை தற்போது வை-12 ரக விமானத்தைப் பயன்படுத்தி அந்தப் பகுதியைக் கண்காணித்து வருகிறது. அவர்களுக்கு உடனடி உதவி வழங்குவதற்காக கொக்கல விமான நிலையத்தில் பெல் 412 ஹெலிகாப்டரும் நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்பில் ஏற்படக்கூடிய எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க நாட்டின் பாதுகாப்பு சேவைகளின் தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பை இந்தக் கூட்டு நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. தற்போது அப்பகுதியில் கடல் கொந்தளிப்பாக இருந்தாலும், மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக கடற்படை மற்றும் விமானப்படை குழுக்கள் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் மீன்பிடி சமூகங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இந்த சம்பவம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், இந்த தொடர்ச்சியான மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய ஏதேனும் சம்பவங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரிவிக்குமாறும் கடலோர சமூகத்தினரிடமும் சக மீனவர்களிடமும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை குறித்த மேலதிக தகவல்கள் வழங்கப்படும்.