--> -->

உயிரைப் பணயம் வைத்தேனும் தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பேன் – மே தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

மே 01, 2019

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை என்று ஒருவருகொருவர் குறைகூறிக் கொள்வதனை விடுத்து நாடு என்ற வகையில் ஒரே இனமாக ஒன்று திரண்டு அன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தின் வடுக்களை நினைவிற்கொண்டு பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் அனைவரும் ஒரே கொடியின் கீழ் ஒன்று திரள வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (01) பிற்பகல் இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மே தின நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பாதுகாப்பான தாய்நாடு – உற்சாகமான வேலைத்தளம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிற்சங்க ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவிலான கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் லெஸ்லி தேவேந்திர உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உயிரை பணயம் வைத்தேனும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எறிவதற்கு உறுதிபூண்டு இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் அழுத்தமாக தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து குடிமக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு நிபுணத்துவத்துடன் கூடிய விசேட வேலைத்திட்டங்களை எமது பாதுகாப்பு படையினர் நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இந்த துன்பியல் சம்பவத்தை தடுப்பதற்கான பொறுப்பை தவறவிட்டவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட விசேட விசாரணை குழுவின் இடைக்கால அறிக்கை நேற்றைய தினம் தனக்கு கிடைத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாளைய தினம் சட்டமா அதிபருடன் கலந்துரையாடியதன் பின்னர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டில் உழைக்கும் மக்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் பிரிவினையின்றி ஒன்று திரள்வார்கள் என்று ஜனாதிபதி அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரருமான நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கட்சித் தொண்டர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

நன்றி: pmdnews.lk