இலங்கை மற்றும் சவூதி அரேபியா வான் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த கலந்துரையாடல்
பெப்ரவரி 15, 2026இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் அண்மையில் சந்தித்து, வான் பாதுகாப்புத் துறையில் எதிர்கால ஒத்துழைப்பும் திறன் மேம்பாட்டும் குறித்து கருத்து பரிமாறிக் கொண்டனர்.
இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அண்மையில், சவூதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படைகளின் தளபதி லெப்டினன் ஜெனரல் மஸ்யாத் அல் அம்ரோ அவர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பு, ரியாதில் உள்ள Saudi Ministry of Defence வளாகத்தில், World Defence Show 2026 நிகழ்வுக்கு பிரதி அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் போது, “தித்வா” சூறாவளி அனர்த்தத்தின் போது சவூதி அரேபியா வழங்கிய ஆதரவிற்காக இலங்கைத் தரப்பு நன்றியைத் தெரிவித்ததுடன் இரு நாடுகளுக்கிடையிலான நிலைத்த நட்புறவின் வெளிப்பாடு எனவும் தெரிவித்தது.
மேலும், அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தைகள் (Staff Talks) மூலம் அனுபவப் பகிர்வு ஏற்படுத்துதல், பாதுகாப்பு கலந்துரையாடல்களில் பரஸ்பர பங்கேற்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இலங்கைப் படையினரின் வான் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியாவில் சிறப்பு பயிற்சி வாய்ப்புகளை வழங்குமாறும் இலங்கைத் தரப்பு கோரிக்கை விடுத்தது.
இச் சுமூக சந்திப்பின் போது வான் பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான தொழில்முறை இராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.