--> -->

நாரங்கல மலைத்தொடரில் உயிரிழந்தவரின் உடல் இராணுவத்தினரால் மீட்பு

பெப்ரவரி 28, 2021

பதுளை, நாரங்கல மலைத்தொடரில் நேற்று இடம்பெற்ற மலையேற்றப் பயணத்தின் போது காணாமல் போன 24 வயதுடைய அகலங்க பெரேரா என்பவரின் சடலம் இலங்கை இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்திருந்த எச்சரிக்கையையும் மீறி, பனிமூட்டத்திற்கு மத்தியில், இரவு நேர முகாம் நடத்த, அவிஸாவெல்லவில் இருந்து தனியார் நிறுவனத்தின் மலையேறும் குழுவினர், பெப்ரவரி 26ம் திகதி மலைஏறத் திட்டமிட்டுள்ளனர்.

இந் நிலையில், மலையேறிகளில் ஒருவர் காணாமல் போனதை அடுத்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர், காணாமல் போன நபரின் உடலினை அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடித்தனர்.

குறித்த பகுதியில் பனிமூட்டம் நிலவிய நிலையிலும் தேடுதல் பணிகளை மேற்கொண்ட இராணுவத்தினர் உயிரிழந்த மலையேறியின் உடலினை சுமார் 700 அடி பள்ளத்தில் வைத்து மீட்டனர்.

உயிரிழந்த மலையேறியின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பொலிஸ் மற்றும் வைத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக இராணுவம்தெரிவித்துள்ளது.