--> -->

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

பெப்ரவரி 28, 2021

கடந்த 23ம் திகதி மன்னாரிலிருந்து கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற நிலையில் நடுக்கடலில் தத்தளித்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று மீட்டது.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, கொழும்பு, கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் உதவியுடன் இந்த மீட்புப் பணிப்பணி முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த மீனவர்களின் படகு தொழிநுட்ப கோளாறு காரணமாக கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பு மத்திய நிலையத்தின் மூலம் சென்னை, கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல் ஒன்று, சர்வதேச கடல் எல்லையை அடைய, அந்த மீனவர்களுக்கு உதவி செய்தது.

சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பாக இருந்த அவர்கள், இலங்கை கடற்படையின் 'சுரனிமல' கப்பல் உதவியுடன் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கொழும்பு, கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்தின் உதவியுடன் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த சுமார் 25 மீனவர்களை இதுவரை மீட்க முடிந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.