--> -->

தென்மேல் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகின்றது

மே 23, 2021

கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவிற்குள் செல்ல வேண்டாம் என  மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

கிழக்கு - மத்திய வங்காள விரிகுடாவிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளில் (08N – 20N, 83E – 100E) மே 22ஆம் திகதியிலிருந்தும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மே 23ஆம் திகதியிலிருந்தும் மறு அறிவித்தல் வரை மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு - மத்தியவங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் மே 23ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அது மேலும் வலுவடைந்துமே 24ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இத் தொகுதியானது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மே 26ஆம் திகதியளவில் மேற்கு வங்காள கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் காரணமாக, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50கிலோ மீற்றர் வரை  அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், குறிப்பாக மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.