--> -->

பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை மேலும் ஊக்குவிக்கும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு

ஆகஸ்ட் 05, 2021

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஐந்தாவது தேசிய பிரதி பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டம், இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளது உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையே இராணுவ தலைமையகத்தில் நேற்று (ஓகஸ்ட், 04) இடம்பெற்றது.

இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளது கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முதலாவது மாநாடு 2011ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன் முயற்சியினால் இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத்தளபதியும் மற்றும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட முப்படை அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் குழு இம்மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் புல விழிப்புணர்வு, சட்டப்பூர்வ ஆளுகை, தேடல் மற்றும் மீட்பு, கடல்சார் மாசுறுதலை தவிர்த்தல், தகவல் பகிர்வு, கடற்கொள்ளைகள், போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தல் ஆகியவற்றை ஒன்றினைந்து கட்டுப்படுத்தும் நோக்கிலேயே கடல்சார் பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட முத்தரப்பு கூட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகள், ஏற்பாடுகள், நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் நிலைபேறான தன்மை அன்பன இந்த அமர்வின் போது கலந்துரையாடப்பட்டன.

மேலும், பிராந்திய மேம்பாடு மற்றும் கூட்டு நடவடிக்கைகளுக்கான முத்தரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தக்கூடிய கருத்துக்கள அனுபவங்களும் அங்கத்துவ நாடுகளிடையே பகிரப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் இராணுவ பிரதம அதிகாரி, Sவிமானப்படை பிரதம அதிகாரி, கடற்படை பிரதம அதிகாரி, கடலோர பாதுகாப்பு படை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், , கடற்படையின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம், விமானப்படையின் தென் பிராந்திய கட்டளைத்தளபதி, இராணுவத்தின் தலைமை சமிக்ஞை அதிகாரி, விமானப்படையின் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர், விமானப்படையின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம், இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம், இணையம் வாயிலான கலந்துரையாடலின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதி, தென்னாசிய மற்றும் சார்க் நாடுகளின் பிரிவு வெளியுறவு அமைச்சின் பணிப்பாளர் நாயகம், அதன் பிரதி பணிப்பாளர், குற்றத்தடுப்புப் பிரிவின் ஆட் கடத்தல் மற்றும் கடல்சார் குற்றச்செயல்களை கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் மற்றும் பொலிஸ் தேசிய புலனாய்வு சேவையின் பிரதி பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.