--> -->

கொழும்பு தெற்கு வைத்தியசாலையில் வார்டு வசதிகள் படையினரால் விஸ்தரிப்பு

ஆகஸ்ட் 27, 2021

ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கமைய கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் 250 கட்டில்களுடன் மேலும் மூன்று புதிய வார்டுகள் இராணுவத்தினரால் ஸ்தாபிக்கப்பட்டு நேற்றையதினம் (ஆகஸ்ட் 26) சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் வழியாட்டலுக்கமைய மேற்கு-பாதுகாப்பு படைத் தலைமையகம், 14 வது பிரிவு, தளவாடப் பட்டாலியன்கள் மற்றும் இலங்கை பொறியாளர்கள் இத்திட்டத்தை நிறைவு செய்வதில் பங்களித்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார்டுகளுக்கான கட்டில்கள் இராணுவ தளவாட படைப்பிரிவினரால்  தயாரித்து வழங்கப்பட்ட அதேவேளை, தேவையான தளபாடங்கள்கள் மற்றும் ஏனைய வசதிகள் என்பன இராணுவத்தின் சேவா வனிதா பிரிவினால் வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் கொவிட் - 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.