--> -->

கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விமானப்படையினரால் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஒக்டோபர் 07, 2021

இலங்கை விமானப்படையினரால் தயாரிக்கப்பட்ட மேலும் இரண்டு ஒக்ஸிஜன் தெரபி உபகரணங்கள் அரச வைத்தியசாலைளில் பயன்படுத்துவதற்காக சுகாதார பிரிவினரிடம் நேற்று (ஒக்டோபர், 06) கையளிக்கப்பட்டதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

விமானப் படையின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த ஒக்சிஜன் தெரபி உபகரணங்கள் கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பழை யாழ் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் பயன்படுத்தப்பட உள்ளதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.

இந்த ஒக்சிஜன் தெரபி உபகரணங்கள் கொவிட்-19 தினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

கொழும்பிலுள்ள விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது குறித்த மருத்துவ உபகரணங்கள் இரண்டும் கண்டி தேசிய வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவு பொறுப்பான மருத்துவ அதிகாரி வைத்தியர் பிரசாத் குணசிங்க மற்றும் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ராஜீவ் நிர்மலசிங்கம் ஆகியோரிடம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவினால் கையளிக்கப்பட்டது.

விமானப்படை தனது சொந்த தயாரிப்பான இது போன்ற ஒக்சிஜன் தெரபி உபகரணங்கள் இரண்டு கடந்த மே மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.