--> -->

பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

டிசம்பர் 07, 2021

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயதில் பாதுகாப்பு ஆலோசகராக கடையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள கேர்ணல் டேவிட் அஷ்மான், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (டிசம்பர், 07) இடம்பெற்றது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகருடன் இணைந்து புதிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள கேர்ணல் போல் கிளேட்டனும் பாதுகாப்புச் செயலாளரரைச் சந்தித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த இரு அதிகாரிகளையும் ஜெனரல் குணரத்ன வரவேற்றார்.

இந்த சினேகபூர்வ சந்திப்பின் போது,  இலங்கையில் தான கடமையாற்றிய காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்காக கேர்ணல் அஷ்மான் பாதுகாப்பு செயலாளருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகரின் சேவையை ஜெனரல் குணரத்ன பாராட்டியதுடன், அவரது எதிர்கால செயற்பாடுகள் வெற்றிகரமாக அமையவும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதேவேளை, இரு நாடுகளுக்குமிடையே நிலவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த தனது முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்தும் வழங்குவதாக உறுதியளித்த பாதுகாப்பு செயலாளர், புதிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள கேர்ணல் கிளேட்டனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

பதவிக் காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள பாதுகாப்பு ஆலோசகருக்கு அவரின் சேவையைப் பாராட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றையும் பாதுகாப்பு செயலாளர் இந்த சந்திப்பின்போது வழங்கினார்.

இந்த சந்திப்பு கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.