--> -->

அன்னதானம் வழங்கும் வைபவத்துடன் ‘ஜெய பிரித்’ பாராயண நிகழ்வு நிறைவு

ஜனவரி 27, 2022

நாடு, நாட்டு மக்கள், உயிர்த் தியாகம் செய்த படை வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவதற்காகவும், தொற்றுநோய் தாக்கத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்காகவும் மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரனால் ‘ஜெய பிரித்’ பாராயணம் செய்யும் நிகழ்வு புதன்கிழமை (26) மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானதுடன் இன்று (27) காலை மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நிறைவு பெற்றது.

ஜெய பிரித் பாராயண நிகழ்வு சம்பிரதாய முறையில் மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம் பெற்றது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் வழிகாட்டலுக்கு அமைய ஜெய பிரித் பாராயணம் செய்யும் நிகழ்வு இனிதே இடம்பெற்றது.

சமய ஆசிர்வாதம் வழங்கும் இந்த நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ, அரசாங்கதில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி மற்றும் இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப் படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், திணைக்களத் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள் மற்றும் விசேட அதிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை தாய்நாட்டிலிருந்து முற்றாக அழித்தொழிப்பதற்காக முன்னோக்கிச் செல்லும் முப்படைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கும் வகையில் வருடாந்த ஜெயபிரித் பாராயணம் செய்யும் இந்த நிகழ்வு 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் போர்முனையில் இருந்த படைவீரர்களுக்கு ஜெய பிரித் பாரயண ஆசிர்வாதங்கள் அளப்பரிய தைரியத்தை அளித்துள்ளதாகவும் அநுஷாசன பிரசங்கத்தின் போது வண. மகா சங்கத்தினர் நினைவு கூர்ந்தனர்.

உயிரிழந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்கள் ஆகியோர் முப்படையினருக்கு ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார வழிகாட்டுதலுக்கமைய முழு மதச் சடங்குகளும் நடைபெற்றன.

ஜனாதிபதி செயலகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்புப் படைகளின் பிரதம் அதிகாரி அலுவலகம், முப்படைகள், இலங்கை பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன இந்நிகழ்விற்கு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.